கோவை: கோவை அன்னூரில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் காரில் சென்று வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காரில் சென்று வழி கேட்கும் மர்ம கும்பல் விலை உயர்ந்த செல்போன்களை பறித்து செல்வதாக அன்னூர் காவல் நிலையத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அன்னூர் சிறுமுகை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், அந்த வழியாக காரில் வந்த சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். சிறுமுகையில் சலூன் கடை நடத்திவரும் வெங்கடாசலபதி என்ற இளைஞர் தனது நண்பர்களான வினோத், விக்னேஷ்குமார், மதன் ஆகியோருடன் காரில் சென்று வழி கேட்பது போல் நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 5 விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் சாலையில் நடந்து செல்பவர்களிடம், காரில் இருந்து வழிகேட்பது போல் நடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்து செல்லும் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. …