கொடைக்கானல், ஏப். 7: கொடைக்கானல் லூர்து மவுண்ட் தந்தி மேடு பகுதியில் அமைந்துள்ளது புனித லூர்து அன்னை ஆலயம். இந்த ஆலயத்தின் திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தில் இருந்து கொடி பவனி துவங்கியது. அன்னையின் திருஉருவம் பொறித்த திருக்கொடி பவனி முக்கிய வீதி வழியாக தந்திமேடு பகுதியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியேற்ற சிறப்பு திருப்பலி நடந்தது.
திருப்பலிக்கு வட்டார அதிபர் அருட்தந்தை சிலுவை மைக்கேல் ராஜ் தலைமை வகித்தார். உதவி பங்குத்தந்தையர்கள் பிரேம் ஜான்சன், நிக்கோலஸ் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டது. இதில் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், முன்னாள் நகர்மன்ற தலைவர் தர் மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, நவநாள் திருப்பலியும், ஏப்.13, 14ம் தேதிகளில் திருத்தேர் பவனி நடைபெறுகிறது.