ஆரணி, மார்ச் 14: தமிழ்நாடு அரசால் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று பாஜ பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, பேசியதால் பெண்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள், குடும்ப தலைவிகள், திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் திமுக மகளிர் அணி சார்பில் குஷ்புவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆரணி அண்ணா சிலை அருகே, குஷ்புவின் உருவ படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவர் லலிதா சண்முகசுந்தரம், மேற்கு ஆரணி ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், தலைமைக் கழக பேச்சாளர் மாலா, பெண் நிர்வாகிகள் சரிதா, தமிழ்ச்செல்வி, கீதா, ஜமுனா, சங்கரி, ஜெயந்தி ஆகிய முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மகளிர் உரிமைத் தொகை குறித்து பிச்சை என கூறி அவதூறாக பேசிய குஷ்புவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து, துடைப்பத்தால் அடித்து பெண்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போளூர்: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் போளூர் பஸ் நிலையம் அருகில் நடிகை குஷ்புவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தே.மாலினிவினோத்திவாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ப.புனிதாபன்னீர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் குஷ்பு படத்தை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தனர். அதனை தொடர்ந்து புகைப்படத்தை எரித்தனர். இதில், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆர்.மங்கலம்ரமேஷ், மாவட்ட தொண்டர் அணி வலைதள பொறுப்பாளர் சே.செல்விசேகர், உட்பட 100க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி: வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே குஷ்பு படத்தை செருப்பால் அடித்து மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் வி.லட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் வாசுகி பாபு, பி.சாந்தி, வசந்தி, மீனா உள்ளிட்ட 50க்கும் அதிகமான மகளிர் கலந்துகொண்டு குஷ்புவை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
செய்யாறு: செய்யாறில் அண்ணா சிலை எதிரில் நேற்று 11 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமையில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் மணிமேகலை, ராணி, ஞானசௌந்தரி, நகராட்சி பெண் கவுன்சிலர்கள் பேபி, மகாலட்சுமி, கல்பனா, ராஜலட்சுமி, ஞானமணி, விஜயலட்சுமி, மல்லிகா மற்றும் மகளிர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று குஷ்புவின் உருவ படத்தை செருப்பாலும், துடைப்பத்தாலும் அடித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் குஷ்புவின் உருவ பொம்மை பெட்ரோல் ஊற்றி எரித்து கண்டனத்தை தெரிவித்து ஆர்ப்பாட்ட கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.