பெரணமல்லூர், மார்ச் 14: பெரணமல்லூர் பகுதியில் சுமார் ₹10 கோடி மதிப்பில் நடைபெற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார். பெரணமல்லூர் பகுதியில் தமிழக அரசின் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் ரிஷப் நேரில் ஆய்வு செய்தார். இதன்படி, பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பகுதியில் சுமார் ₹35 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் தலா ₹3.5 லட்சம் மதிப்பில் புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள இரண்டு குளங்கள் பணி, இதனைத் தொடர்ந்து ஜெகநாதபுரம் பகுதியில் ₹5.32 லட்சம் மதிப்பில் குளம் புனரமைப்பு பணி, அல்லிபுத்தூர் பகுதியில் முதல்வரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ₹42.35 லட்சம் மதிப்பில் போடப்பட்டுள்ள தார்சாலை பணி மற்றும் கொழப்பலூர் பகுதியில் சுமார் ₹8.47 கோடி மதிப்பில் கட்டப்பட்டு மேம்பாலம் உள்ளிட்ட சுமார் ₹10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளை நேரில் ஆய்வு செய்து தரத்தினைகேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, ஆரணி உபகோட்டம் சாலை மற்றும் மேம்பாலம் பிரிவு உதவி செயற்பொறியாளர் நீலமேகம், ஊரக வளர்ச்சி உதவிசெயற்பொறியாளர் ஆனந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன், தாட்சாயிணி, ஒன்றியபொறியாளர்கள் ரமேஷ், புஷ்பா, நெடுங்குணம் ஊராட்சி தலைவர் சகுந்தலா வேலாயுதம் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.