கலசபாக்கம், மார்ச் 14: கலசபாக்கம் அருகே பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்தது. கலசபாக்கம் அடுத்த மேல் வில்வராயநல்லூர் கிராமத்தில் பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து குலதெய்வ வழிபாடு செய்வது வழக்கம். ஆண்டுதோறும் மாசி மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 9ம் தேதி முதல் உற்சவ விழா தொடங்கி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து மேளதாளம், வானவேடிக்கை முழங்கிட அருள்பாலிப்பர். வரும் 19ம் தேதி வரை பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி கலசபாக்கம், மோட்டூர் பூண்டி எலத்தூர், மேலாரணி சேங்க, புத்தேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.