கும்பகோணம், பிப்.10: கும்பகோணம் அருகே சூலமங்கலம்முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50ம் ஆண்டு பால்குடம், காவடி, சந்தனகாப்பு மகோற்சவ திருவிழா நடைபெற்றது. பாபநாசம் தாலுக்கா, சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் முத்து முனீஸ்வரர் ஆலயத்தின் 50ம் ஆண்டு மகோற்சவ திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தி சிம்ம வாகனத்தில் குடமுருட்டி ஆற்றில் எழுந்தருளினார்.
அப்போது மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் பால்குடம், பன்னீர்குடம் மற்றும் பல்வேறு வகையான காவடிகள் எடுத்து, பக்தர்கள் உற்சவமூர்த்தியுடன் அய்யம்பேட்டையின் முக்கிய வீதிகளின் வழியாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனையும், அதனைத்தொடர்ந்து சந்தனக்காப்பு விழா நிகழ்வும் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர், சூலமங்கலம், அய்யம்பேட்டை, செருமாக்கநல்லூர், அரியமங்கை கிராம மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் டிஎஸ்பி அசோக் மேற்பார்வையில் போலீசார் செய்திருந்தனர்.