தஞ்சாவூர், பிப்.10: தஞ்சாவூர் அருகே வாழை தோட்டத்தில் புள்ளியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தஞ்சாவூர் புள்ளியியல் துறை துணை இயக்குனர் செல்வம் பரிந்துரைப்படி கோட்ட புள்ளியியல் உதவி இயக்குனர் பாஸ்கரன், புள்ளியியல் ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள வடுகக்குடியில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ள தோட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சாகுபடி முறைகள் குறித்து விவசாயி மதியழகன் எடுத்துரைத்தார். மேலும் பழம் மற்றும் காய்கறி திட்டத்தின் கீழ் ஏதேச்சை முறையில் தேர்வு செய்து வாழைத்தார்களை அறுவடை செய்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வாழை பயிர் இடப்பட்ட தோட்டத்தில் பரப்பளவு வாழைத்தாரின் எண்ணிக்கை மற்றும் எடை மற்றும் ஊட்டச்சத்து, வாழைப்பயிர்களுக்கு தேவையான உரம் மற்றும் செலவினங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். அதேபோல் செயற்கை உரம் இன்றி இயற்கை முறையில் வாழைத்தார்கள் சாகுபடி செய்யப்படுவதாக அதிகாரியிடம் விவசாயி விளக்கினார். மேலும் வாழைத்தாரை அறுவடை செய்து வாழை சீப்புகளின் எண்ணிக்கை, பழங்களின் எடை மற்றும் பழத்தின் விலை போன்ற விவரங்களை சேகரித்து தலைமை இயக்குனருக்கு அனுப்பினர்.