தஞ்சாவூர், பிப்.10: குரூப்4 தேர்வர்களுக்கு வரும் 14ம் தேதி இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி-IV பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை 30.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு 9.6.2024 அன்று நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் பயன்பெறும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக TNPSC GROUP-IV தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 14.02.2024 (புதன்கிழமை) அன்று தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கப்படவுள்ளது. இவ்வகுப்பு காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது.
மேலும் 13.02.2024 செவ்வாய்க்கிழமைக்குள் அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து பதிவு செய்தல் அவசியம். TNPSC தொகுதி-IV கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தொடர்பான விபரங்களை 04362- 237037 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலைநாட்களில் தொடர்புகொண்டு அறிந்துகொள்ளலாம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த TNPSC தொகுதி IV தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் கட்டணமில்லா இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.