சென்னை, பிப்.2: ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (36). இவருக்கு ஈஸ்வரி (30) என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். விவேகானந்தன் கடந்த 4 ஆண்டுகளாக சென்னையில் தங்கி ஒப்பந்ததாரராக வேலை செய்து வந்தார். இவர் மீது காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் அடிதடி, கட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து வாலாஜாவுக்கு பஸ்சில் சென்ற அவர் டோல்கேட்டில் இறங்கி நண்பரான சிறுகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த அஜித் (25) என்பவருடன் பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் இவர்கள் மீது மோதியுள்ளது. இதனால் விவேகானந்தனும், அஜித்தும் பைக்கில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது காரில் வந்த 4 பேர் கும்பல் விவேகானந்தனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது.
இதில், தலை, முகம், மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த விவேகானந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அஜித் அவர்களிடம் இருந்து தப்பியோடிவிட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ராணிப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக 5 பேர் ஆம்பூர் கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். அதில் ராணிப்பேட்டை மாவட்டம் எசையனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த துளசி மகன் கோபி (28), காவேரிப்பாக்கம் கண்ணதாசன் நகர் அருகே அத்திப்பட்டு காலனியை சேர்ந்த ராஜா மகன் ராஜேஷ் (24), நெமிலி அடுத்த பனப்பாக்கம் சத்தியமூர்த்தி தெருவில் வசித்து வரும் கனகராஜ் மகன் தாமோதரன் (26), நெமிலி பெரிய கிராமம் குட்டை தெருவை சேர்ந்த பாண்டியன் மகன் சந்துரு (20), நெமிலி மாமண்டூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரகாசம் மகன் சூர்யா (28) ஆகிய 5 பேர் சரணடைந்தனர்.