சென்னை, பிப்.2: காக்கிநாடா மற்றும் ராஜமுந்திரி, விஜயவாடா பகுதிகளில் உள்ள தங்க நகை வியாபாரிகள் அரசுக்கு வரி செலுத்தாமல் கடத்தல் தங்கத்தை வாங்கி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நெல்லூர் மாவட்ட எஸ்.பி. திருமலேஸ்வர் உத்தரவின் பேரில் கூடுதல் எஸ்.பி. சவுஜன்யா மேற்பார்வையில், நெல்லூர் நகர இன்ஸ்பெக்டர் சீனிவாசா தலைமையில் நெல்லூர் சபாபுபேட்டை இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் ஆத்மகுரு பஸ் ஸ்டாண்ட் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் வகையில் இருந்த 8 பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் திருப்பதி, காளஹஸ்தி, சென்னைக்கு சென்று தங்கம் வாங்க பணத்துடன் செல்வதாக கூறினர். ஆனால் அவர்களிடம் இருந்த பணத்திற்கு உரிய ரசீது காண்பிக்கவில்லை. இதையடுத்து அவர்களிடமிருந்து ரூ.4 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல் நெல்லூர் ரயில் நிலையத்தின் கிழக்கு வாயிலில் சென்னைக்கு செல்லும் ரயிலுக்காக காத்திருந்த 4 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 44 லட்சத்து 50,000 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இதேபோன்று விஜயவாடாவிலிருந்து புதுச்சேரிக்கு கிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சை வெங்கடாசலம் தேசிய நெடுஞ்சாலை டோல் பிளாசா அருகே நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சென்னை சவுகார் பேட்டைக்கு தங்கம் வாங்க செல்வதாக கூறி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே 40 லட்சத்து 50,000 ஆயிரம் பணம் உரிய ரசீது இல்லாததாததால் அவற்றை பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். நெல்லூரில் 3 வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ஒரே நாளில் 15 பேரை கைது செய்து ரூ.7 கோடியே 23 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். அடுத்தகட்ட நடவடிக்கைக்காக வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பணம் ஒப்படைக்கப்படும் என நெல்லூர் நகர டிஎஸ்பி சீனிவாசா தெரிவித்தார். தேர்தல் நேரம் நெருங்கி வரும் நிலையில் ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட ரூ.7.23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.