காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள உண்டியல் சில மாதங்களுக்குப் பிறகு நேற்று திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. அப்போது, வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், வல்லக்கோட்டை முருகன் கோவில் செயல் அலுவலர் கார்த்தி, கோவிந்தவாடி அகரம் தட்சிணாமூர்த்தி கோயில் செயல் அலுவலர் சுரேஷ், ஆய்வாளர் பூங்கொடி முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, காணிக்கைகளை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். இதில், 32 லட்சத்து 6 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கம், 46.300 கிராம் தங்கம், 404 கிராம் வெள்ளி ஆகியவை கிடைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், ரூ.2000 நோட்டுகள் 7 பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.