திருப்போரூர், ஜன.8: வேங்கடமங்கலம் கவுன்சிலர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னை வண்டலூரை அடுத்துள்ள வேங்கடமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த கல்யாணி. இவரது மகன் அன்பரசு (27). அதே ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினராக இருந்தார். மேலும். அதிமுகவில் காட்டாங்குளத்தூர் ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 22ம் தேதி கீரப்பாக்கத்தில் நடைபெற்ற துக்க நிகழ்வில் கலந்துக்கொள்ள சென்ற அன்புராஜ் மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காயார் போலீசார் விசாரணை மேற்கொண்டு 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளான சோமு என்கிற சோமசுந்தரமூர்த்தி (31), சுனில் என்கிற சுதர்சனம் (20) ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்போரூர் போலீஸ் பற்றி வெங்கடேசன் மாவட்ட எஸ்பிக்கு பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் கேளம்பாக்கம் அடுத்த சாத்தங்குப்பத்தை சேர்ந்த சோமு என்கிற சோமசுந்தரமூர்த்தி மற்றும் ஒத்திவாக்கத்தைச் சேர்ந்த சுனில் என்கிற சுதர்சனம் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின் நகல் நேற்று புழல் சிறையில் உள்ள இருவரிடமும் வழங்கப்பட்டது.