மாமல்லபுரம், ஜன.8: மாமல்லபுரம் அரசு பள்ளியில் நடந்த உணவு திருவிழாவை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். மாமல்லபுரம் அர்ஜூனன் தபசு சிற்பத்துக்கு எதிரே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் உணவு திருவிழா கடந்த 5ம் தேதி நடந்தது. விழாவுக்கு, பள்ளி தலைமையாசிரியை லதா தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ் கலந்து கொண்டு உணவு திருவிழாவை தொடங்கி வைத்தார்.
1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும், ‘உடலுக்கு நன்மை தரும் உணவுகள்’ என்னும் தலைப்பில் தங்களது வீட்டில் செய்த பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு தோசை, சீடை, இளநீர் பாயசம், புட்டு, கொழுக்கட்டை, அதிரசம், பாசிப்பருப்பு உருண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுப் பொருள்களை பள்ளிக்கு எடுத்து வந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, உடலுக்கு நன்மை தரும் உணவு பொருள்களை வரிசையா கண்காட்சியில் வைத்து காட்சி படுத்தப்பட்டது. மேலும், உணவு பொருட்களை வீணாக்காமல், அதை மீண்டும் உண்ணும், உணவாக எப்படி மாற்றலாம் என்று மாணவ – மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.