பாடாலூர், செப். 25: கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக மருத்துவரணி நடத்தும் மாபெரும் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மருத்துவரணி சார்பில் மாபெரும் ஒருங்கிணைந்த இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். முகாமில் மாநில மருத்துவரணி துணை செயலாளர் வல்லபன், மாவட்டத் தலைவர் ஜெயலட்சுமி, மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, துணைத் தலைவர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மருத்துவ குழுவினர் சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு நோய் கண்டறிதல், கண் பரிசோதனை மற்றும் கண்புரை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, தோல் நோய், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை செய்து உரிய சிகிச்சை அளித்து ஆலோசனை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் ராகவன், மருத்துவரணி அமைப்பாளர் சிலம்பரசன், துணை அமைப்பாளர்கள் பாலசந்தர், பிரேமலதா, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கொளக்காநத்தம் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். முன்னதாக, குன்னம் தொகுதி மருத்துவரணி அமைப்பாளர் சுதாகர் வரவேற்றார். நிறைவாக துணை அமைப்பாளர் சோலைமுத்து நன்றி கூறினார்.