கரூர், செப்.23: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இரண்டு சக்கர வாகன நிறுத்தம் காரணமாக மற்ற பேரூந்துகள் எளிதாக செல்ல முடியாத நிலை நிலவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூரில் இருந்து திருச்சி, திண்டுக்கல், பைபாஸ் சாலை மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேரூந்துகளும் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா வழியாக சென்று வருகிறது.இந்நிலையில், ரவுண்டானா வளைவு பகுதியில் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அருகிலேயே பழைய அமராவதி பாலத்தில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவிற்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இது போன்ற நிறுவனங்களுக்கு வரும் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், பேருந்து வளைந்து வந்து நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும் பகுதியை ஒட்டி இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இந்த பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்களும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இரண்டு சக்கர வாகன நிறுத்தத்தை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.