க.பரமத்தி,செப்.23: சின்னதாராபுரம் கடைவீதியில் அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் கரூர்- தாராபுரம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி, காவல் நிலையம் பல்வேறு வர்த்தக நிறுவன கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் நான்கு சக்கர, இரு சக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையின் நடுவே நிறுத்தி விட்டு செல்கின்றனர்.
இதனால் இவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு ஊர்ந்து செல்ல வேண்டி உள்ளது. முக்கிய விரத நாட்களில் பழனி முருகன் கோயிலுக்கு வாகனங்கள் மூலமாகவும், பாதசாரிகளாகவும் செல்லும் பக்தர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசார் அமர்த்தி கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.