சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அறுபத்து மூவர் விழாவில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி அன்னதானம் வாங்கிய பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கி, வரும் 28ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால், நெரிசலை தவிர்க்கும் வகையில், கோயிலை சுற்றிலும் போக்குவரத்துக்கு போலீசார் தடைவிதிதுள்ளனர். முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் விழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து அறுபத்து மூவர் ஊர்வலத்தை கண்டு வழிபாடு செய்தனர். வழக்கமாக, விழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகளால் ஒரு சில இடங்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன்படி மயிலாப்பூர் பேருந்து நிலையம் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் அன்னதானம் வழங்கப்பட்டதால் அங்கு கூட்டம் அலை மோதியது. அசோக்நகர் பகுதியை சேர்ந்த வரலட்சுமி (50) என்பவர், தனது மகளுடன் அன்னதானம் வாங்க முயற்சி செய்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளையர்கள் அவர் அணிந்து இருந்த 10 சவரன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் மாயமாகினர். இதில் வரலட்சுமிக்கு கழுத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டது. உடனே அலறியபடி அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதார்.ஆனால் போலீசார் குற்றவாளிகளை பிடிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கு மாறாக சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர். இதுபோல் 10க்கும் மேற்பட்ட பெண்களிடம் கொள்ளையர்கள் செல்போன், பர்சை கொள்ளையடித்து சென்றனர். நேற்று முன்தினம் நடந்த தேர் திருவிழாவில் 2 பேரிடம் செயின் பறிப்பு மற்றும் 3க்கும் மேற்பட்டோரிடம் செல்போனை கொள்ளையர்கள் பறித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தாலும், கொரோனா அச்சம் காரணமாக கூட்ட நெரிசலில் போலீசார் முழுமையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளையர்கள் தங்களது கைசரிசையை காட்டி சென்றனர்….
கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழாவில் அன்னதானம் வாங்கிய பெண்ணிடம் 10 சவரன் தாலி செயின் பறிப்பு: 10க்கும் மேற்பட்டோரிடம் செல்போன், பர்ஸ் திருட்டு
previous post