ஈரோடு, மே 31: ஈரோடு டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த ஞானேஸ்வரன் மனைவி மீனா (68). இவர், கடந்த 29ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து ஈரோட்டிற்கு சபரி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதி பெட்டியில் பயணித்தார். ரயில் சேலம் ரயில்வே ஸ்டேஷனை கடந்து ஈரோட்டினை நோக்கி வந்தபோது, மீனா ரயிலில் இருந்த பாத்ரூமிற்கு சென்றார். அங்கு மீனா திடீரென பாத்ரூமிற்குள் மயங்கி விழுந்தார்.
இதையடுத்து சக பயணிகள் மீனாவை மீட்டனர். ரயில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், மீனாவை ரயில்வே மருத்துவர் பரிசோதனை செய்ததில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.