பெரம்பூர்: ‘’எனக்கு எதிரிகள் கிடையாது என்று நண்பர்களுடன் பந்தாவாக பேசியதால் வாலிபரை வெட்டிக்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி சர்மா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (31). இவர் சென்னை பர்மா பஜாரில் உள்ள செல்போன் கடையில் பணியாற்றுகிறார். நேற்று மதியம் பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் நண்பர்களுடன் கார்த்திக் மது அருந்தியதாக தெரிகிறது. போதை ஏறியதும் அவர்களுடன் திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், கார்த்திக்கை சரமாரி வெட்டினர். இதில் தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலத்த வெட்டு காயம் அடைந்து மயங்கிவிழுந்தார். அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்துகொண்ட பிறகு தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டது. இதுகுறித்து கிடைத்த தகவல் அடிப்படையில், புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் செம்பேடு பாபு மற்றும் புளியந்தோப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கார்த்திக்கின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தெரியவந்திருப்பதாவது; சென்னை எம்கேபி. நகர் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியான காட்டான் மோகன் என்பவர் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு கார்த்திக்குடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதை ஏறியதும் கார்த்திக், காட்டான் மோகனை அடித்துள்ளார். இதன்காரணமாக இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்துள்ளது. இந்த நிலையில், கார்த்திக் தான் செல்லும் இடம் மற்றும் சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம், ‘’நான் காட்டான் மோகனை அடித்து விட்டேன். அவன் ஒரு ஆளே இல்லை’’ என்று பெருமையாக பேசியுள்ளார். இது காட்டான் மோகனுக்கு தெரியவந்ததும் கடும் கோபம் அடைந்துள்ளார். தன்னை ஏளனமாக பேசும் கார்த்திக்கை கொலை செய்யவேண்டும் என்று நண்பர்களுடன் அடிக்கடி கூறி வந்துள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்டு காட்டான் மோகனின் மகன் மாதவன், நண்பர்கள் ஐந்து பேருடன் கார்த்திக்கு மது விருந்து அளிப்பது போல வரவழைத்துள்ளார். சுடுகாட்டில் வைத்து அனைவரும் மது அருந்தியுள்ளனர். அங்கு கார்த்திக்கு போதை ஏறியதும் அனைவரும் சேர்ந்து கார்த்திக்கை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது.இதுகுறித்து செம்பியம் போலீசார் வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், வியாசர்பாடி பி.வி.காலனி 7வது தெருவை சேர்ந்த பீஸ்கா கார்த்திக் (32), பி.வி.காலனி 5வது தெருவை சேர்ந்த செந்தில்குமார் (42), பெரம்பூர் ஜட்ஜ் பரமசிவன் தெருவை சேர்ந்த ஜனா (19) ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான மாதவன் என்கின்ற மாது, சரவணன், சத்யநாராயணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்….