நாகர்கோவில், ஜன.10: சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் ஜனவரி 10ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் தொடக்க பள்ளிகளுக்கு ₹1000 வீதம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் இணை செயல்முறைகளில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் சிறப்பு செயல்பாடாக ஜனவரி மாதத்தில் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்திலிருந்து மன்றச் செயல்பாடுகளுக்கான செலவினங்கள் மேற்கொள்வதற்காக ₹4 கோடியே 86 லட்சத்து 49 ஆயிரத்து 400 ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின் கடிதத்தில் அனைத்து மாவட்ட அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிகளுக்கும் சிறப்பு பள்ளி தூய்மை பணி செயல்பாடுகளுக்கு கூடுதலாக பயன்படுத்தி கொள்ள ₹2 கோடியே 43 லட்சத்து 50 ஆயிரம் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக தொடக்க பள்ளிகளுக்கு ₹1000 வழங்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.