குமாரபுரம், ஜன.10: குமாரபுரம் அருகே கூழக்கடை சோலாபுரம் பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (47). ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. அவரது மனைவி மகேஸ்வரி (43). இந்த தம்பதிக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 3 மாதமாக பால்ராஜ் பண்ணிபொத்தை ஆசாரிவித்து மலைக்கு அதிகாலை 3 மணிக்கு ரப்பர் பால் வெட்ட சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலையை தொடங்கும் போது விஷப்பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பால்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து அவரது மனைவி கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.