மானாமதுரை, மார்ச் 3: மானாமதுரையில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் செய்களத்தூர், கள்ளர்வலசை, கண்மாய்பட்டி, நத்தபுரக்கி, வலசை,சூரக்குளம், மணக்குளம், கால்பிரவு, மேலமேல்குடி, கட்டிக்குளம், ஆவரங்காடு, பெரியகோட்டை, பீசர்பட்டினம், மிளகனூர் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கத்தரி, வெண்டை, அவரக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், மிளகாய், தேங்காய், கீரை வகைகள் உள்ளிட்ட நாட்டுக்காய்கறிகள் அனைத்தும் விளைகிறது. தினமும் இவற்றை பறித்து அருகிலுள்ள மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகளிடம் விற்கின்றனர்.
மொத்தமாக இவற்றை விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். மானாமதுரையில் வியாழக் கிழமை நடக்கும் வாரசந்தையில் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கிறது. எனவே விவசாயிகளுக்கு நிரந்தரமாக லாபம் கிடைக்கும் வகையில் மானாமதுரை புறநக ர்பகுதியான சிப்காட்டில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், மானாமதுரை வட்டாரத்தில் நாற்பதுக்கும் அதிகமாக கிராமங்களில் இருந்து கத்தரி, வெண்டை உள்ளிட்ட நாட்டுக் காய்கறிகளும் மலைகளில் விளையும் பீட்ரூட், முள்ளங்கி, முருங்கை பீன்ஸ், கருணைக் கிழங்கு போன்றவையும் விளைகின்றன. இவற்றை வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். இவற்றை விவசாயிகள் நேரடியாக சந்தைப்படுத்த உழவர்சந்தை ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரடியாக லாபம் கிடைக்கும். எனவே உழவர் சந்தை அமைக்க மாவட்ட நிர்வாகமும் ேவளாண் துறையும் நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என்றார்.