மாமல்லபுரம்: உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டு சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான சைக்கிள் பேரணி நடந்தது. நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஒன்றிய அரசு அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டது. அதில், நினைவு சின்னங்கள் முன்பு யோகா, மாரத்தான் மற்றும் சைக்கிள் பேரணி உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அந்தந்த துறை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒன்றிய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நேரு யுவகேந்திரா சார்பாக உலக சைக்கிள் தினத்தை முன்னிட்டும், 75வது சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக தேசப்பற்றை ஊக்குவித்தல் மற்றும் சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாமல்லபுரம் கடற்கரை கோயில் வளாகம் முன்பு நேற்று காலை தனியார் கல்லூரி மாணவர்கள் 75 பேர் கலந்து கொண்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. இதற்கு முன்னதாக, கடற்கரை கோயில் அருகே புறப்பட்ட சைக்கிள் பேரணி மாமல்லபுரம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கிழக்கு கடற்கரை சாலை நுழைவாயில் அருகே நிறைவு பெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதிஸ்வரன், பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், சென்னை சுங்கத்துறை உதவி ஆணையர் பாலகுமார், செங்கல்பட்டு மாவட்ட என்எஸ்எஸ் அதிகாரி பிரகாஷ், திரைப்பட நடிகை ஷர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்….