காஞ்சிபுரம், ஆக.23: காஞ்சிபுரத்தில், இருளர் பழங்குடியின மக்களுக்கு சமூக சேவை புரிந்து, சுதந்திர தினத்தன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற கவிதா தாந்தேணி, கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தன்னலமற்ற சமூக சேவை செய்தவர்களுக்கு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூரில் வசிக்கும் கவிதா தாந்தேணி, இருளர் பழங்குடியினர் மக்களின் முன்னேற்றத்திற்காக ஜாதிச்சான்று, வீட்டுமனை பட்டாக்கள், வாக்காளர் அடையாள அட்டைகள், மருத்துவக் காப்பீடு, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவைகளை மனுக்களாக பெற்று உரிய அலுவலகத்தில் சமர்ப்பித்து, அவைகளை பெற்றிட உதவி புரிந்துள்ளார்.
அந்த வகையில், இருளர் பழங்குடியினர் மக்களுக்கு உணவு, தேவையான உதவிகள், முன்னேற்ற செயல்பாடுகள் உள்ளிட்ட சமூக தொண்டுகள் செய்து மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தேர்வுபெற்று கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் விழாவின்போது, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 லட்சம் ரொக்கம், பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.
இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் கவிதா தாந்தேணி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, கலெக்டர் கலைச்செல்வி மோகனை நேரில் சந்தித்து பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது, உதவி கலெக்டர் (பயிற்சி) சங்கீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.