காஞ்சிபுரம், ஆக.23: காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏகாம்பரநாதர் கோயில் அருகில் கட்டண வாகன பாதுகாப்பு மையத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடகிரிராஜா தோட்டத்தில், காஞ்சிபுரத்தில் வாகன நெரிசல் தவிர்க்கும் பொருட்டு, கட்டண வாகன பாதுகாப்பு மையத்தினை கலெக்டர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். பின்னர், அவர் பேசியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெருகி வரும் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில், ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான வெங்கடகிரிராஜா தோட்டத்தை 1.75 ஏக்கர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாற்றி நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. காஞ்சிபுரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்திட தேவையான வசதிகள் செய்து தரப்படும்.
இதனால், நகரில் வாகன நெரிசல் குறையும் என்பதையும், இதுபோன்று ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான (யாத்ரி நிவாஸ்) 8.27 ஏக்கரிலும், உலகளந்த பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 1.86 ஏக்கரிலும், மேட்டு தெருவிலுள்ள நகரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 6.59 ஏக்கர் மற்றும் சித்தேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான ஏக்கரிலும் நிரந்தர வாகனம் நிறுத்துமிடம் அமைத்திட சம்மந்தப்பட்ட கோயில் நிலங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விரைவில், இவ்விடங்கள் வாகன நிறுத்தி வைக்கும் இடங்களாக மாற்றப்படும். இதன்மூலம் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் அதிகரிக்கும். ேமலும், கோயில் நிலங்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், செயல் அலுவலர் முத்துலட்சுமி, அறங்காவலர்கள் விஜயகுமார், ஜெகநாதன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.