அரியலூர்,ஜூன் 13:அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 561 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, நேற்று வழங்கினார். அரியலூர் மாவட்டம், அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளி முதல் நாளான நேற்று பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 561 மாணவ. மாணவிகளுக்கு 2023-24ம் ஆண்டிற்கான தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடநூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, வழங்கினார்.
பின்னர் கலெக்டர் பேசுகையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கென பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் 2,59,745 எண்ணிக்கையிலான பாட நூல்கள் மற்றும் 3,87,240 எண்ணிக்கையிலான நோட்டுப் புத்தகங்கள் வரப்பெற்று பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பள்ளி மாணவ, மாணவிகள் நல்ல முறையில் முழுமையாக பயன்படுத்தி உயர்கல்வி பெறும் வகையில் தங்களது திறமைகளை மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) அம்பிகாபதி, தலைமையாசிரியர், பெற்றோர் ஆசிரிய கழகத்தினர், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.