கோவை, ஏப்.20: கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 100 வயது மூதாட்டி வீல் சேருடன் வந்து ஆர்வமாக வாக்களித்து சென்றார். கோவை சுகுணாபுரம், செந்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்தாயம்மாள் (100). இவர் தனது மகளுடன் வீல் சேரில் வந்து தனது வாக்கினை செலுத்தினார். இது குறித்து மூதாட்டி முத்தாயம்மாள் கூறுகையில், “நான் பலமுறை வாக்களித்து உள்ளேன்.
நாடு நன்றாக இருக்க வேண்டும் என ஒவ்வொரு முறையும் வாக்களித்து வருகிறேன். நானே சென்று வாக்களிப்பது என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. இதனால்தான் நேரடியாக வாக்குச்சாவடிக்கு எனது மகளுடன் வந்து எனது வாக்கினை செலுத்தி உள்ளேன்” என்றார்.
கோவை சாய்பாபா காலனி கே.கே புதூரை சேர்ந்த 98 வயது மூதாட்டி முத்துலட்சுமி வீல் சேரில் அங்குள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
இது குறித்து அவருக்கு கூறுகையில், ‘‘நான் நேரு காலத்தில் இருந்தே எனது வாக்கை தவறாது பதிவு செய்து வருகிறேன். இதுவரை 15க்கும் மேற்பட்ட தேர்தலில் வாக்களித்து உள்ளேன். நாடு நலம் பெறவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு சிந்தித்து அனைவரும் வாக்களிக்க வேண்டும்’’. என்றார். 98 வயதிலும் மூதாட்டி ஆர்வமுடன் வாக்களித்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.