மதுரை, ஏப்.20: மதுரையில் வாக்களிக்க செல்லும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை காட்டி அரசு டவுன் பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இதற்கென அனுமதி வழங்கியிருந்த நிலையில் பெருவாரியான முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.
மதுரை கோரிப்பாளையம் முதியவர் லட்சுமணன் கூறும்போது, ‘‘வாடகை வீட்டில் தூர தொலைவில் வசித்து வருகிறேன். வாக்குச்சாவடிக்கு எப்படி செல்வது என்ற யோசனையில் இருந்தேன். இந்த இலவசப்பயணம் மகிழ்ச்சியளித்துள்ளது’’ என்றார். மேலும், வாக்களிப்பதற்காக சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த தென்மாவட்டத்தினர், தங்கள் ஊர்களுக்கு செல்ல மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் நேற்று காலை குவிந்தனர். இதனால் பஸ்நிலையப்பகுதியில் காலையில் பெரும் கூட்டம் இருந்தது.