சிவகங்கை, மே 30: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 7ம் தேதி வரை, பாடப்பிரிவுகள் வாரியாக நடக்க உள்ளது. கல்லூரி நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இன்றும் (மே 30), நாளையும் (மே 31) சிறப்பு பிரிவு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு, ஜூன் 1ம் தேதி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினிஅறிவியல் பாடப்பிரிவிற்கும், ஜூன் 2ல் தாவரவியல், விலங்கியல், மனையியல் பாடப்பிரிவிற்கும், ஜூன் 5ல் பி.பி.ஏ, பி.காம் பாடப்பிரிவிற்கும், ஜூன் 6ல் வரலாறு, பொருளியல் பாடப்பிரிவிற்கும், ஜூன் 7ல் தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவிற்கும் கலந்தாய்வு நடக்க உள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் மூன்று நகல்கள், 3 போட்டோ உள்ளிட்ட ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.