அம்பை, பிப்.11: அம்பை அருகே ஊர்க்காடு கோவில் அரண்மனை தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலபதி என்ற கண்ணன் (55). இவர் கடந்த ஜன.8ம் தேதி முன்விரோதம் காரணமாக கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதில் அதேபகுதி தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் முத்துப்பாண்டியன் (29), கல்லிடைக்குறிச்சி, மேலத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தம்பிரான் என்ற அருள் (26) ஆகியோரை போலீசார் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து இவர்கள் இருவரும் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக அம்பை இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சிலம்பரசனிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன் பேரில், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதுதொடர்பான நகலை போலீசார் பாளை சிறையில் ஒப்படைத்தனர்.