கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு காவல் எல்லைக்கு உட்பட்ட ராமச்சந்திராபுரம் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான டெய்லரிங் துணி ஏற்றுமதி நிறுவனம் மூடப்பட்டுள்ளது. இதில் கடந்த 4 மாதங்களாக நேபாளத்தை சேர்ந்த பாபின் குருங்(27) என்பவர் பாதுகாவலராக வேலை செய்து வருகிறார். அவருடன் அவரது மனைவி அமிகா குருங்(23) என்பவரும் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாபின் குருங், மாதர்பாக்கம் பஜார் வீதிக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, நிறுவன வளாகத்தில் தங்கியிருந்த இடத்தில் உள்ள இரும்பு குழாயில் தனது துப்பட்டாவால் அமிகா குருங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அமிகா குருங் அடிக்கடி யாரோ ஒரு ஆண் நண்பருடன் செல்போனில் பேசி வந்ததாகவும், அதனை கணவர் பாபின் குருங் கண்டித்ததால் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிரிவேடு போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.