சென்னை: சென்னையில் முதுகலை மருத்துவம் பயின்று வந்த மருத்துவர் வீட்டில் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரது மறைவுக்கு பணி சுமை காரணமல்ல என மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் ஆலத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட திமூர் பகுதியை சேர்ந்த பச்சை முத்து எனபவரின் மகன் மருதுபாண்டியன் 31 வயதான இவர் மெட்ராஸ் மருத்துவ கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து கொண்டு பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு 4 மாதங்களுக்கு முன்பு அனிதா என்பவருடன் திருமணமாகியுள்ளது. கூடுவாஞ்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனிதா பயின்று வருகிறார். மறுத்து பாண்டியன் சூளைமேட்டிலும் அனிதா கூடுவாஞ்சேரியிலும் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மருது பாண்டியன் அறுவை சிகிச்சை ஒன்றை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். இரவு முழுவதும் அனிதா அவரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆ னால் அவர் செல்போனை எடுக்காததால் கிண்டியில் உள்ள மற்றொரு உறவினருக்கு அனிதா தகவல் கொடுத்துள்ளார். அவர் சூளைமேட்டிலுள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது மருது பாண்டியன் இறந்த நிலையில் கீழே விழுந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் மருதுபாண்டியனின் உறவினர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் மருதுபாண்டியனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அவரது மனைவி 3 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் மருதுபாண்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரது மறைவுக்கு பணிச்சுமை காரணம் என்ற கருத்தும் தொடர்ந்து 36 மணி நேரம் பணியில் இருந்தார் என்பதும் முற்றிலும் தவறானது என சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.