பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நேற்று, வளர்ச்சியடைந்த பாரதம் தூதர் என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவு நமது மீனவர்கள் வாழ்க்கையின் ஓர் அங்கம். அதைப் பற்றி பேசக்கூடாது என்று எப்படி சொல்லலாம். நேரு கச்சத்தீவை ஒரு தொல்லை என்றார்.
இந்திரா காந்தியோ கச்சத்தீவை ஒரு சிறிய பாறை என்றார். தேர்தலுக்காக மட்டும் இந்த விஷயத்தை எடுக்கவில்லை. தேர்தல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சொல்ல வேண்டிய விஷயம் இது. பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தலில் போட்டியிடலாம். யாரை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பதை எங்கள் கட்சி தீர்மானிக்கும்.
எங்கள் கட்சி தலைமை சொன்னால் தேர்தலில் போட்டியிட தயார். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார். பணம் இல்லாததால் தேர்தலில் போட்டியிடவில்லை என நிர்மலா சீதாராமன் முன்பு கூறியிருந்தார். அதற்கு கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனம் வந்ததையடுத்து இப்போது, ‘பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தலில் போட்டியிடலாம்’ என சொல்லி தனது நிலையை மாற்றியிருக்கிறார் என தேர்தல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.