பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில பாஜ தலைவர் பதவியிலிருந்து நளின் குமார் கட்டீல் விலகினார். அதன்பின்னர் 6 மாதங்களுக்கு பிறகு பாஜ மாநில தலைவராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். பாஜ மாநில தலைவர் பதவிக்கு சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே, சுனில் குமார் ஆகிய தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, பாஜ மாநில தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல் முறையாக எம்.எல்.ஏவான ஆறே மாதங்களில் மாநில தலைவர் பதவி விஜயேந்திராவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் இன்னொரு மகனான ராகவேந்திரா, மக்களவை எம்.பியாக இருக்கிறார்.