ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் அதனை இடித்துவிட்டு புதிதாக கடைகள் கட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவக்கப்பட உள்ளது. இந்நிலையில், கடந்த 30ம் தேதி நடந்த ஊட்டி நகராட்சி மாதாந்திர கூட்டத்தில் மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் மற்றும் கவுன்சிலர் முஸ்தபா இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக திமுக கவுன்சிலர் முஸ்தபா நகரமன்ற கூட்டத்தில் பேசியதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அண்ணாமலை தவறான அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், தவறான செய்தியை பரப்பி வருவதாகவும் கூறி கவுன்சிலர் முஸ்தபா ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து கவுன்சிலர் முஸ்தபா கூறுகையில், ‘‘நகராட்சி மார்க்கெட் கடைகள் கட்டுவது தொடர்பாக மட்டுமே பேசினேன். வேறு எதை பற்றியும் பேசவில்லை. ஆனால் நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார் ரூ.36 கோடி பெற்றதாக நான் பேசியதாக தவறான தகவலை பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.