பெர்லின்: உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அதிதி ஸ்வாமி வசப்படுத்தியுள்ளார். ஜெர்மனியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் நேற்று களமிறங்கிய அதிதி (17 வயது) 149-147 என்ற புள்ளிக் கணக்கில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
இறுதிப் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா வென்னம் 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றார். அரையிறுதியில் அதிதியிடம் 145-149 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்ற ஜோதி, 3வது இடத்துக்கான மோதலில் துருக்கியின் இபெக் தோம்ருக்கை வீழ்த்தினார் (150-146).