Wednesday, May 22, 2024
Home » மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியீடு

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டோர் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியீடு

by Karthik Yash

சென்னை: மகளிர் உரிமை தொகை கேட்டு வந்த விண்ணப்பங்களில் சில பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற கடந்த ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை முதல் கட்டமாகவும், ஆக.5ம் தேதி முதல் ஆக.14ம் தேதி வரை இரண்டாவது கட்டமாகவும், விடுபட்டவர்களுக்கு ஆக.18ம் தேதி முதல் ஆக.20ம் தேதி வரை சிறப்பு முகாம் வழியாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்ட விண்ணப்பதார்களின் தகுதிகள் சரிபார்க்கப்பட்டு, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்களும், தகுதியின்மைக்கு உள்ளான விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை.

அதன்படி, விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு வரும் 18ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய விரும்பினால், குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் வழியாக வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

அதேபோல, வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு அலுவலராகச் செயல்படுவார். இணையதளம் மூலம் செய்யப்படும் மேல்முறையீடுகள், அரசு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய் கோட்டாட்சியர் மேல்முறையீட்டு விண்ணப்பங்களைத் தீர்வு செய்ய கள ஆய்வு தேவைப்படும் நேர்வுகளில், சம்பந்தப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர்கள் வழி கள ஆய்வு அறிக்கையினைப் பெற்று விசாரணை செய்வார். இந்த மேல்முறையீடு நடைமுறைகள் அனைத்தும் இணையதளம் வழியாக மட்டுமே செய்யப்படும். மேலும், வருவாய் கோட்டாட்சியர் பயனாளிகளின் தகுதி மற்றும் தகுதியின்மைகள் தொடர்பாக தனி நபர்களின் மூலம் வரப்பெறும் புகார்கள் குறித்த விசாரணை அலுவலராக செயல்படுவார். இணையதளம் வழியாக பெறப்படும் புகார்கள் மேல் முறையீட்டு மனுக்களுக்கு பின்பற்றப்படும் நடைமுறைகளை பின்பற்றி விசாரிக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

20 − nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi