சென்னை: நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் மாவட்ட தலைவர்கள் மற்றும் பிரிவு அணி தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் சத்தியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். கூட்டத்தில், மாநில துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, விஜய்வசந்த் எம்பி, முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, இல.பாஸ்கர், பிரிவு அணி தலைவர்கள் புத்தன், சுதா, நவீன், சந்திரசேகர், பெரம்பூர் நிசார் மற்றும் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன் குமார், டில்லிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் போதும் தமிழ்நாடு காங்கிரஸ் தமிழ்நாட்டு அரசின் பின்னால் நிற்கிறது. ஆனால், தமிழக பாஜ, தமிழக அரசின் பின்னால் நிற்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்துள்ள 5,000 கன அடி தண்ணீர் வந்தே தீரும்’’ என்றார்.