சென்னை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது;
இன்று மாலை சென்னை நந்தனத்தில் திமுக மகளிரணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள அகில இந்திய மகளிர் தலைவர்கள் வருகை தருகின்றனர். மழை வந்தாலும் 50 ஆயிரம் மகளிர் அமர்ந்து, தலைவர்களின் கருத்துகளை கேட்கும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டு பந்தலில் உள்ள 50 ஆயிரம் இருக்கைக்கு அருகே ஒரு பழச்சாறு பாக்கெட், தண்ணீர் பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. 10 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் உள்ளன. தமிழ்நாடு முதல்வரின் சிறப்பான வழிகாட்டுதல்படி, மாநாட்டில் பங்கேற்பவர்கள் எவ்வித சிரமமுமின்றி பங்கேற்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சரியாக மாலை 5 மணியளவில் மாநாடு துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக, பின்னணி பாடகர்கள் மாலதி, சின்னபொண்ணு, மகிழினி மணிமாறன் ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.