சென்னை: சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புதுப்பேட்டை தெற்கு கூவம் ஆறு சாலை பகுதியை சேர்ந்த பாரதிராஜா அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 3 தலைமுறைகளாக மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில், அண்ணா சதுக்கம் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர், கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்ய வேண்டும் என்றால் வாரம்தோறும் ரூ.400 மாமூல் தர வேண்டும். இல்லை என்றால் குதிரை சவாரி செய்ய அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று மிரட்டுகிறார்.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தொழிலை நம்பித்தான் எங்களது குடும்பம் வாழ்கிறது. எனவே, மெரினா கடற்கரையில் குதிரை சவாரி செய்ய காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய்க்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தற்போது குதிரையோட்டியிடம் மாமூல் கேட்ட பெண் உதவி ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.