மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் புக்கத்துறை ஊராட்சியை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மனைவி முனியம்மாள் (60). இவர், தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணி புரிந்து வந்தார். முனியம்மாள், வழக்கம்போல் நேற்று முன்தினம் புக்கத்துறையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அருகே சக பணியாளர்களுடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தார். அப்போது, மதியம் வெயில் மிகவும் அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், முனியம்மாள் வெப்பம் தாங்காமல் அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். சக பணியாளர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர். முனியம்மாளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், முனியம்மாள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனை தொடர்ந்து பணியில் இருக்கும்போது மரணம் அடைந்த இந்த தகவல் மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.