திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (51). பெயிண்டிங் தொழில் செய்து வந்தார். அவரது மனைவி பிந்து (43). இந்த தம்பதிக்கு அமல் (17) என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரனுக்கும், பிந்துவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இது தொடர்பாக போலீசில் புகார் செய்த பிந்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று பிந்து, மகனுடன் தன்னுடைய பொருட்களை எடுப்பதற்காக கணவனின் வீட்டுக்கு சென்றார்.
அப்போது ராஜேந்திரன் திடீரென பெயிண்டிங் செய்ய பயன்படுத்தும் டர்பன்டைனை மனைவி மற்றும் மகன் மீது ஊற்றி தீ வைத்தார். இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக ராஜேந்திரனின் உடலிலும் தீ பரவியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். இதில் படுகாயமடைந்த பிந்து, அமல் ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வர்க்கலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.