விழுப்புரம்: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தியின் உடல் நாளை மாலை அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. விழுப்புரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏயுமான புகழேந்தி உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. கடந்த சில நாட்களான உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகழேந்தி, நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்துக்காக டிஸ்சார்ஜ் ஆகி வந்தார்.
பொதுக்கூட்ட மேடையில் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் புற்று நோய் பாதிப்பு புகழேந்திக்கு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
புகழேந்தியின் மரண செய்தி கேட்டு மருத்துவமனை முன்பு குவிந்திருந்த புகழேந்தி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். புகழேந்தி மரணம் திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அத்தியூர் திருவாதி கிராமத்தில் நாளை இறுதிச் சடங்குகள் முடிந்த பின் புகழேந்தி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்திய பின் புகழேந்தி உடல் சொந்த ஊர் கொண்டு செல்லப்படுகிறது.