சென்னை: நாடு முழுவதும் 75வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரினா காமராஜர் சாலை உழைப்பாளர் சிலை அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்களையும், விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விழாவில், அரசு பள்ளி கட்டுவதற்காக ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை அரசுக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம். எங்கள் பூரணம் அம்மா’ என பதிவிட்டு குடியரசு தின விழாவில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.