புதுடெல்லி: ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மற்றும் அவருடைய நெருங்கிய உதவியாளர்களின் ரூ.150 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேற்கு வங்கத்தில் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் நடந்த ஊழல் தொடர்பாக முன்னாள் உணவு துறை அமைச்சர் ஜோதி பிரியா மல்லிக்,அவருடைய உதவியாளர்களான பகிபூர் ரகுமான், சங்கர் ஆத்யா ஆகியோரை பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
இந்நிலையில்,ஜோதி பிரியா, ரகுமான், சங்கர் ஆத்யா ஆகியோருக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள 48 அசையா சொத்துக்களை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை நேற்று தெரிவித்தது. இதில், கொல்கத்தா சால்ட் லேக் பகுதியில் உள்ள ஜோதி பிரியாவின் வீடு, அவருக்கு நெருக்கமானவர்களின் சொத்துகள், கொல்கத்தா, பெங்களூருவில் உள்ள ரகுமானுக்கு சொந்தமான 2 ஓட்டல்கள், மூன்று பேரின் வங்கி கணக்குகள்,வைப்பு தொகைகள் உள்ளிட்டவை அடங்கும். பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஜோதி பிரியா அன்பளிப்பாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.150 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.