ஊட்டி: தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. முக்கிய சாலைகளில் போக்குவத்து நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. கோடை வெயில் சமவெளிப்பகுதிகளில் சுட்டெரிக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஊட்டிக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். புனித வெள்ளி மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்கள் அரசு விடுமுறை கிடைத்த நிலையில், நேற்று முன்தினம் முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர்.
இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து லாட்ஜ், காட்டேஜ் ஆகியவைகளில் உள்ள அறைகள் நிரம்பி வழிந்தன. சுற்றுலா பயணிகள் கூட்டம் வருகை அதிகரித்ததை தொடர்ந்து பெரும்பாலான காட்டேஜ் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் கட்டணங்களை உயர்த்தியுள்ளனர். சாதாரணமாக, ரூ.800க்கு கொடுக்கும் அறைகள் ரூ.1500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எனினும், முண்டியடித்துக் கொண்டு சுற்றுலா பயணிகள் அறைகளை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. படகு சவாரி செய்ய நேற்று சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அதிகளவு வந்த நிலையில் நேற்று ஊட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
அனைத்து சாலைகளிலும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணி வகுத்து நின்றன. குறிப்பாக, ஊட்டி – குன்னூர் சாலையில் லவ்டேல் சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவசர தேவைகளுக்கு நகருக்குள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் வாகனங்கள், லாரிகள் மற்றும் வேன்கள் போன்றவை லவ்டேல் சந்திப்பு பகுதியில் இருந்து மஞ்சனக்கொரை வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
கமர்சியல் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது. தொட்டபெட்டா செல்லும் சாலை, சேரிங்கிராஸ், மார்க்கெட் சாலைகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் திணறினர்.
நகரில் போதிய பார்க்கிங் இன்றி வானங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அதேபோல், ஓட்டல்களில் மதிய உணவிற்காக சுற்றுலா பயணிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஊட்டி நகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.