தண்டையார்பேட்டை: ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மகப்பேறு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் செலவில் வாஷிங் மிஷின் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஆய்வகத்தினை ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ திறந்து வைத்தார். ராயபுரம் சிமென்ட்ரி சாலையில் ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் வடசென்னைக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள் பிரசவத்திற்காகவும், பெண்கள் கர்ப்பப்பை உள்ளிட்ட பிரச்னைகளுக்காகவும் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த மருத்துவமனையில் பழமை வாய்ந்த கட்டிடத்தின் மேற்கூரை சிதிலமடைந்து காணப்பட்டதால், அதை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டு, வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில் உள்ள ஜிஆர்டி தங்க மாளிகையின் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் ரூ.35 லட்சம் நிதி வழங்கப்பட்டது. அதன்படி, இம்மருத்துவமனையில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்று முடிவடைந்தது. இதனை ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து, நோயாளிகளின் உடைகளை சுத்தம் செய்வதற்காக மருத்துவமனை நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் வாஷிங் மிஷின் வழங்கப்பட்டது. அதேபோல், புதுப்பிக்கப்பட்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார். அப்போது, ஆய்வகம் மருத்துவ பயன்பாட்டிற்கு வருவது எங்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என மருத்துவர் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சாந்தி, மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.