துரைப்பாக்கம்: திருவான்மியூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் தர்மன் (46). இவர் நேற்று காமராஜர் அவென்யூ, சவுத் போக் ரோடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த கார் அங்கு நின்றிருந்த பைக் மீது மோதியது.
இதைப் பார்த்த போக்குவரத்து காவலர் தர்மன் காரை ஓட்டி வந்த நபரிடம் வாகனத்தை ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனையடுத்து காரை ஓட்டி வந்த நபர் கதவை மூடாமலேயே காரை திடீரென எடுத்தார். இதில் கார் கதவு தர்மன் மீது மோதியதில், அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தர்மனுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.