*தென்னை மரங்களும் மகசூல் இழக்கும் அபாயம்
வலங்கைமான் : வலங்கைமான் பகுதியில் வேகமாக நீர் நிலைகள் குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகளின் மீன் வளர்ப்பு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை மரங்களம் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.வலங்கைமான் தாலுகாவில் உள்ள 50 கிராம ஊராட்சிகளில் அறநிலைத்துறைக்கு சொந்தமான குளங்கள் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான குளங்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்ட குளங்கள் உள்ளன.
இவை நீங்களாக பல்வேறு காலகட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் நூறு சதவீத மானியத்தில் நிலத்தடி நீரை பாதுகாத்திடவும் மீன் வளர்ப்பு செய்து வருவாய் ஈட்டிடும் வகையில் பண்ணை குட்டைகள் அமைத்து தரப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. கர்நாடக அரசு நமக்கு தரவேண்டிய தண்ணீரை தர மறுத்தது மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவு போன்ற காரணங்களால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததுமேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததை அடுத்து அக்டோபர் 10ம் தேதி மேட்டூர் அணை மூடப்பட்டது. வழக்கமாக ஜனவரி மாதம் இறுதியில் மேட்டூர் அணை மூடப்படும் நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு முன்பாகவே மேட்டூர் அணை மூடப்பட்டதால் குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரப்புவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
இந்நிலைகள் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமளையும் குறிப்பிடும்படியாக பெய்யாததால் சுமார் 50% மேற்பட்ட நீர்நிலைகள் நிரம்ப வில்லை மேலும் 50% நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை.இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக வெப்பம் நிலவி வருகிறது. தொடர்ந்து அனல் காற்று வீசி வரும் நிலையில் முன்னதாக நிரம்பிய ஒரு சில நீர் நிலைகளிலும் தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக மீன் வளர்ப்பு பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீர்மட்டமும் குறைகின்றது. நஞ்சை நீங்கலாக புஞ்சை நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட தென்னை உள்ளிட்ட மரங்களும் மகசூல் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மே, ஜூன் மாதங்களில் குளங்களில் தண்ணீர் குறைவது வாடிக்கை. ஆனால் தற்போதைய மாத இறுதிக்குள்ளாக அனைத்து நீர்நிலைகளும் வறண்டு போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் கெளுத்தி, ரோகு, கட்லா, சில்வர் கெண்டை, புல் கெண்டை, விரால், மிர்கால் ஆகிய இரகங்கள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு வளர்ப்பு மீன் வளர்க்கப்படும் குளங்களில் குறைவான வயதுடைய குஞ்சுகளை விட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும் என்பதால் ஒரே அளவுள்ள குஞ்சுகளாக விடப்படுகிறது .ஒரு நாளுக்கான தீவனத்தை மொத்தமாகக் கொடுக்காமல் இரண்டாகப் பிரித்து காலை, மாலை என இரண்டு வேளைகளில் மீன் வளர்போர் கொடுத்து வருகின்றனர் .தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மீன் வளர்ப்பும் பாதிப்படைந்துள்ளது.