வாலாஜாபாத்: வாலாஜாபாத் 4வது வார்டில் நடந்த முதல்வர் பிறந்தநாள் விழாவில், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் வழங்கினர். வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு சேர்க்காடு பகுதியில் பேரூர் திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். விழாவில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம், பேரூராட்சி மன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர், பேரூர் செயலாளர் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள், தமிழக அரசின் மக்களுக்கான திட்டங்கள் அரசு இளைஞர்களுக்காக விளையாட்டு துறையில் கொண்டு வந்துள்ள திட்டங்கள் மட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் உள்ளிட்ட தமிழக அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள ஒன்றிய அரசு காஸ் விலை அன்றாட வீட்டு உபயோக பொருட்களுக்கான வரி உயர்வு குறித்து விளக்கி பேசினர். மேலும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற வாக்களிக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர்.
இதனைதொடர்ந்து அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் 1000 நபர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர் தனசேகர், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தியாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சை காந்தி, அவைத்தலைவர் கோபி, பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுகுமாரன், 4வது வார்டு திமுக நிர்வாகிகள் திருநாவுக்கரசு, சசிகுமார், நமச்சிவாயம், பாபு, மோகன், முருகன், பேரூர் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.